Saturday, December 31, 2011

வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்!




சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)
முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)

இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)

1.இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
2. யுகபுருஷன் – அப்பாதுரை

தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)

1.படுதா - போகன்
2.சுனை நீர் – ராகவன்
3.உயிர்க்கொடி - யாழன் ஆதி
4,அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
5.பெருநகர சர்ப்பம் -  நிலா ரசிகன்
6.கொடலு - ஆடுமாடு
7.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
8.பம்பரம் - க.பாலாசி
9.அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
10.முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
11.கல்தூண் - லதாமகன்
12.கருத்தப்பசு - சே.குமார்

இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Wednesday, October 12, 2011

அப்ரஞ்ஜி: சிறுகதை



இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின் சாந்தாவின் 25ஆம் வருட திதி இன்று. மஞ்சள் காமாலையில் இறந்த அவ‌ளுக்கு கூழுற்றும் தினம், இந்த வருடம் சிறப்பாக செய்துவிடவேண்டுமென ராஜேஸ்வரி நேற்றே கூறிவிட்டார்.

விடியாகாலை வேளையில் அடுப்பு வெப்பத்தின் காரணமாக உடலில் பரவியிருந்த வியர்வை குளிராய் இதமாய் இருந்தது. துடைக்க மனம் வராமல் வேலை செய்துகொண்டிருந்தாள் அப்ரஞ்ஜி. கொழுக்கட்டையின் மணம் அந்த தோட்டத்து ரேழி முழுவதும் பரவியிருந்தது. பெரிய சுவாலைகள் பாத்திரத்தின் பாதியளவிற்கு மேல் பரவி அமானுஷ்ய சத்தத்துடன் எரிந்துகொண்டிருந்தது அடுப்பு. சாயம்போடும் கரிபிடித்த பெரிய பாத்திரங்களும் கரண்டிகளும் தாறுமாறாய் ஒரு பக்கமும், மறுபக்கம் விறகுகளின் அடுக்கு ரயிலொடு சார்புவரைக்கும் உயர்ந்திருந்தன. வெப்பம் தாளாமல் நீர்கொழுக்கட்டைகள் பாத்திரத்திலிருந்து வெளியேவர எத்தளிப்பது போல‌ தத்தளித்துக் கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. வரும் நேரம்தான், காகங்கள், குயில்களின் கத்தும் ஒலிகள் கேட்க தொடங்கிவிட்டன. விடிவதற்குள் முடிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கண்களும் கைகளும் வேகமாக செயல்பட்டன.

அப்ரஞ்ஜி…..’ இருட்டிலிருந்து ஒருகுரல் நீண்டகுரல் வெளிப்பட்டது.

…’ பதிலளித்தாள்.

ஆயிடுச்சா…’ இது நாகமனியின் மருமகள் ராஜியின் குரல்.

ஆயிட்டே இருக்குடியம்மா…, இதோ முடிஞ்சிடும்

ராஜியின் மருமகள் தனத்தின் மாப்பிள்ளைக்கு போனவிருந்தின் போது அவர்கள் ஊரில் கிடைக்காத இந்த நீர்கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிட்டதால் இம்முறையும், தனம் கேட்டுக்கொண்டதன்பேரில், ஊரிலிருந்து வரும் அவருக்காக விசேஷமாக தயாராகிவருகிறது.

அளவாக இருந்த கொழுக்கட்டைகளாக பார்த்து எடுத்து இரண்டு குண்டான்களில் வைத்துக்கொண்டு, மிச்சத்தை கட்டைகள் இழுத்துவிடப்பட்ட அடுப்பிலேயே விட்டுவிட்டு எதிர்கொண்டுவந்த தனத்திடம் கொடுத்தாள் அப்ரஞ்ஜி. நினைத்ததைவிட வேகமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் விரிந்த உதடுகளில் காவிபடர்ந்த பற்களிடையே சிரிப்பாக பெற்றுக்கொண்டாள் தனம். அப்ரஞ்ஜி என்றாலே வேகம்தான். எத்தனை பேருக்கு எத்தனை வகை என்றாலும் சொன்ன நேரத்தில் செய்துமுடித்துவிடக் கூடியவள்.

தனத்தின் மகள் பிருந்தாவிற்கு சந்தோஷில்பெரிய செலவழித்து பிறந்த ஆண்குழந்தையை கவனிக்க சென்றது அப்ரஞ்ஜிதான். ராசியான கையென்று வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு முதல் சக்கரைத் தண்ணி கொடுத்தது அப்ரஞ்ஜிதான். முன்பெல்லாம் பிரசவத்திற்கு அவளைதான் அழைத்தார்கள். மொட்ட வீட்டு நாகமணி, கீழத்தெரு காவேரியம்மாளுக்கு பத்து பத்து பிள்ளைகள் சளைக்காமல் பிரசவம் பார்த்தாள், பிற்பாடு ஆஸ்பத்திரி, கிளினிக் என வந்துவிட அவளுக்கு உடல் ஒத்துழைப்பு குறைந்துவிட பார்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இன்றைக்கும் குழந்தைக்கு முதல் சக்கரைத்தண்ணி அவள் கையால்தான், பிறகு குழந்தையை குளிப்பாட்டுவதிலிருந்து பீதுணி அள்ளுவதுவரை அவள்தான் செய்வாள்.

பஞ்சுபஞ்சாக பறக்கும் வெள்ளைமுடி, லேசான கூன்விழுந்த முதுகு, இறுக்கிகட்டப்பட்ட சேலையில் அப்ரஞ்சியை பார்க்க தொண்ணூறு வயது என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது. இதுவரை அப்ரஞ்ஜி நோய், நொடியென்று படுத்தது கிடையாது. தண்ணீர் இறைப்பது, இந்த தெருவில் நாலு வீடுகளுக்கு வாசல் தெளித்து கோலம் போடுவதும், துணிதுவைப்பதும் இப்போதும் செய்கிறாள். கோரா சாயம் வெளுக்க கும்பகோணத்தில் இப்போது கூப்பிட்டாலும் போய் செய்வாள். லெட்சுமி வீட்டில் முன்பு தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தாள். நாகமணி இருக்கும் வரை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். நல்லா பொறுப்பா வேலைய பாக்க்குற அப்ரஞ்ஜி நீ, அங்க கூப்பிறாங்க இங்க் கூப்பிறாங்கனு எங்கேயும் போயிற கூடாது ஆமா, நம்ம கூடவே இருக்கனும்என்பாள். ஆபத்துல உதவுற நா உன்னைய விட்டு எங்க போயிறப்போறேன் நாவமணிஎன்று அப்ரஞ்ஜியும் சளைக்காமல் கூறுவாள். அவளின் பத்து பிள்ளைகளையும் பிரசவம் பார்த்து வளர்த்தவள் அன்றுமுதல் என்ன விசேஷங்கள் என்றாலும் அவள்தான் முன் நிற்பாள்.

கொழுக்கட்டைகளை வாங்கிகொண்ட தனம், ‘அப்ரஞ்ஜி, நேத்து சொன்னமாரி இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு மொன பொங்கல் வச்சிடு, இந்தா காசுஎன்று பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சரிடியம்மா, கூலுத்தி முடிஞ்சொன்ன, பதினொருபன்னன்டு மணிக்கா வெச்சுறேன்’.

எப்போதும் மொனபொங்கல் செய்வது அப்ரஞ்ஜிதான். லச்சுமியம்மா வீட்டு கொல்லையில் மூன்று செங்கல்லும், ஒரு சிறு சட்டியும், ஒரு செம்படமும் இருக்கின்றன அந்த தெரு மொனைக்கு தோதாக. கொஞ்சம் அரிசியும், வெல்லமும் வாங்கி அந்த சின்ன சட்டியில் போட்டு மூன்றுகல்லில் அடுப்பு மூட்டி கொதித்ததும் வடித்து மொகனையிலேயே உள்ள திரிசூலமோ, பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதேனும் சாமிக்கோ படைத்துவிட்டு, சுற்றியிருக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்ததுபோக மிச்சத்தை அங்கிருக்கும் சிறுகல்லில் வைத்துவிட்டு வருவாள். தெரு தாண்டி புருஷன் வீட்டிற்கு பிறந்த குழந்தையோடு செல்பவளுக்கு, குழந்தைக்கும், அவளுக்கும் எந்த காத்து கருப்பு அண்டாமலிருக்க மொனபொங்கல் செய்வது ஐதீகம்.

மொனபொங்கல் என்றில்லை வளைகாப்பு, காதுகுத்து, கல்யாணம், கருமாதி இப்படி விசேஷ நாட்களில் முறையாக செய்ய‌ அப்ரஞ்ஜி இல்லாமல் முடியாது. சில நேரங்களில் எல்லா வீட்டு விசேஷங்கள் ஒரேநாளில் அமைந்துவிட்டால் எல்லா வீட்டிற்கும் போகமுடியாமல் அவள் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதுபோக‌ பாவில் சிக்கல் எடுக்க, சாயம்போட, பிறந்த குழந்தைக்கு குளிப்பாட்ட, தீட்டுக்கழிக்க, காட்டேரி பூசை செய்ய, அரிவுரி அம்மன் பூசை செய்ய எல்லாவற்றிற்கும் அப்ரஞ்ஜிதான்.

தீபாவளி சீசனில் பட்டுஜவளி கும்பகோணத்தில் அமோகமாக இருக்கும். வேலையும் அதற்குதகுந்தாற் போல அவளுக்கு இருக்கும். வீதியில் பாவுபோடும் சம‌யங்களில் வாசு ஆள்சொல்லி அனுப்பிவிடுவார். அப்ரஞ்ஜியின் விரல்களின் அசைவுகளுக்கு மட்டுமே பாவின் சிக்கல்கள் விரைந்து நேராகும்.

பெண் பிரசவத்தின்போது. அப்ரஞ்ஜிபச்ச உடம்பு, பொண்ண பாத்துக்கஎன்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து - குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.
 
குழந்தை ரொம்ப அழுதால் அப்ரஞ்ஜியை கூப்பிட்டுவிடுவார்கள். எண்ணெய் தேய்த்து நீவி , சாம்பிராணி போட்டு பாட்டு படிப்பாள்

தாள மாமையா - தசரத
ராம சந்திரையா

கஞ்சி வரதையா ‍- எனை

கொஞ்சி வருதையா

மடியில் வைத்து குழந்தைக்கு லட்டுபிடிப்பது போல காட்டி அப்ரஞ்சி பாடும் போது குழந்தை சொக்கி சிரிப்பதை கண்டு ஊரே மகிழ்ந்துபோகும்.

செத்தவர்களின் திதிநாள், பொங்கபடைப்பை அய்யர் வந்து கூறுவதற்கு முன்பே ஞாபகப்படுத்துவது அப்ரஞ்ஜியாகத்தான் இருக்கும். சரியான நாளில் அவளின் கனவில் வந்து இறந்தவர்கள் சோறு கேட்டுவிடுவார்கள். சோறு கேட்டபின் பூஜை வைக்காமல் விட்டுவிட முடியாதே? திதி வைக்கும்நாளில் செத்தவர்கள் அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மட்டுமே தெரியும். தனக்கு பிடித்ததை வைத்து படைத்தற்கு நன்றி சொல்லிவிட்டோ அல்லது பிடிக்கவில்லை என்று அவளிடம் திட்டிவிட்டோ செல்வார்கள். இருபது வருடம் முன்பு ராஜேஸ்வரியின் எட்டுவயது மகள் மஞ்சகாமாலை நோய்வந்து செத்தபின் ஒவ்வொரு சித்திரையிலும் அந்த நட்சத்திரத்தில் நாள் மாறாமல் அவள் வந்து அப்ரஞ்சியிடம் கூல் ஊற்றச் சொல்வாள். இன்று அந்த கூல் ஊற்றும் நாள்.
தனம் கொடுத்த பழையதை எடுத்து செல்பின் மீது வைத்துவிட்டு அரசலாறிற்கு குளிக்க கிளம்பும்போது இறந்த ராஜேஸ்வரியின் மகளை நினைத்துக்கொண்டாள். நேற்று மாதிரி இருக்கிறது அதற்குள் இருபதுஐந்து வருடஙகள் ஆகிவிட்டன. சட்டென போய்விட்டாள். அவளிடம் பேச்சு கொடுத்து மாளாது. அத்தனை சுட்டி. கிள்ளிபோடும் வெத்தலை தொடுமைகள் அவளுக்கு பிடிக்கும். பாட்டி பாட்டி என்று அவள் பின்னாலெயே சுற்றுவாள். அவள்தான் கேட்டாள் அப்ரஞ்ஜின்னா என்ன பாட்டி என்று.

ம்.. தங்கம்டி தங்ககட்டி பாத்திருக்கியா அதான் அர்த்தம்

அப்ப தங்க க‌ட்டியா நீஎன்று கூறிவிட்டு சீவலை வாயில் போட்டபடி ஓடினாள்.

நாகமணி வீட்டில் சாயம் போட்டுக்கொண்டிருந்த சின்னையாவைத்தான் அப்ரஞ்ஜிக்கு கட்டிவைத்தார்கள். உண்மை பெயரான செல்லம்மா, பருவத்தில் ‍ கல்யாணம் கட்டிவந்த சமயத்தில், அவள் அழகில் மயங்கி அப்ரஞ்ஜி என்று மாமியாகாரி செல்லமாக அழைக்க அதுவே நிலைத்துப் போனது. கூற‌ப்பட்டு சேலையில் அவ்வளவு பாந்தமாக இருந்தாளாம். சின்னையாவை பார்த்து, இந்த பழத்துக்கா இவளை கட்டிக்கொடுத்தார்கள் என்று கேட்காதவர்கள் இல்லையாம். மாமியாகாரி போடி, உங்க வேலைய பாத்துக்கிட்டுஎன்பாள்.

என்ன சாபமோ, கொடுப்பினையோ தெரியவில்லை, கொஞ்ச நாளில் சின்னையா சித்தபிரமை பிடித்துபோனது. வறுமையில் உழன்ற அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டாள். தெருக்களிலேயே அழைந்துகொண்டிருந்தவன் அப்புறம் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவன் மூலமாக பிற‌ந்த அவளின் மகள் அம்புஜம் வளர்ந்தபின் இருக்கும் காசை வைத்து தாராசுரத்தில் கட்டிக்கொடுத்தாள். கொஞ்சநாளில் அவளும் காணாமல் போனாள். ஆற்றில் விழுந்து செத்துவிட்டதாகவும், அவ்வூரின் வியாபாரி ஒருவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், அவளின் ஒரு கொழுந்தனை வைத்துக் கொண்டு அம்மாபேட்டையில் குடித்தனம் நடத்துவதாகவும் பேச்சு அடிப்பட்டது. அப்ரஞ்ஜி என்னஏது என்று புரியாமல் காலத்தை ஓட்டினாள்.

சின்னனையா காணாமல் போனபோதும், அம்புஜம் விட்டுபோன போதும் ஆறுதலாய் இருந்தவர்கள் நாகமணியும் காவேரியும் தான். ஒன்னுக்கும் கவலபடாத ஒன்னைய அப்படியே விட்டுடமாட்டோம்என்று ஆறுதல் சொன்னார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் இப்போதும் அதே பாச‌த்துடன்தான் பார்க்கிறார்கள். அவர்கள் போய் பல ஆண்டுகள் ஆனபிறகும், அவர்கள் சந்ததியர்கள் லெட்சுமி, மல்லிகா, மீனாட்சி என்று அத்தனை பேரும் அவளுக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் போனபின்பும் அவர்களின் மகன்கள் மகள்கள் அவர்களின் மகன்கள், மகள்கள் என்று பார்த்துவிட்டாள், எல்லாருக்கும் அவள் பிரியம்தான்.

இத்தனை காலத்திலும் தலைசுற்றலை தவிர‌ நோய்நொடி என்று வந்து படுத்ததுகிடையாது. மற்றவர்களுக்கு பாரமாக இருந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு இருந்தாலும் அப்படி நம்பள ஆண்டவன் வைக்கமாட்டான் என்று திடமாக நம்பியிருந்தாள்’. அவளுக்கு இன்றையதினம் இற்றோடு. இந்த நெசவாளர் குடியிருப்பில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்தில் அவர்கள் வீடுகளிலேயே ஆங்காங்கே தங்கிகொண்டு வாழ்க்கை நடத்திவந்தாள்.

பாதியிருட்டிலேயே அரசலாற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட இன்று செய்யவேண்டிய கூழுற்றுதல், மொனபொங்கல் வேலைகளை பற்றி நினைத்தபடி நிதானமாக நடந்துவந்தாள், துவைத்த துணிகள் ஈரத்தோடு தோள்களில். சொட்டிய துளிகள் அவள் நடந்துவந்த பாதையை காட்டின. ரோட்டில் அந்த நேரத்தில் யாரும் இருக்கபோவதில்லை. மும்மூர்த்தி விநாயகர் கோவில் அருகில் வந்தபோது தலைசுற்றலாக‌ வந்தது. விநாயகரை நின்று வழிபட்டு செல்வது வழக்கம். முன்னாடி வச்சலா மட்டுமே பால் வாங்க குவளையோடு சென்றுகொண்டிருந்தாள். அவளை கூப்பிட நினைத்தாள் ஆனால் கொஞ்ச நேரத்தில் சட்டென மயங்கி விழுந்தாள்.

பொழுதுபுலர்ந்தபோது அப்ரஞ்ஜி மயங்கி விழுந்து கிடப்பது தெரிய, ரோட்டில் சென்றவர்கள் பயந்து வீடுகளிலும் கடைகளிலும் ஏறிக்கொண்டார்கள். டீக்குடிக்க வந்த ரெங்கா பார்த்துவிட்டு நாகமணியின் கொள்ளுபேரன் தினேஷிடம் பட்டுநூல்காரம்மா மய‌ங்கி விழுந்துகிடக்குஎன்ற செய்தி சொன்னான். வெய்யில் ஏறி அப்ரஞ்ஜி மேல் மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது. தெரு முழுவதும் இதே பேச்சாக இருந்தது. அப்ரஞ்ஜி இப்படி ஆயிட்டாளே என்றார்கள், அவளுக்கு நல்ல மனசு அதான் இப்படி சட்னு போய்டா என்றார்கள்.

சைக்கிள் மிதித்து வந்த தினேஷ், உதட்டோரம் ரத்தகரையைப் பார்த்துவிட்டு முனிசிபாலிட்டிக்கு உடனே தகவல் சொன்னான். கொஞ்ச நேரத்தில் முனிசிபாலிட்டிகாரர்கள் வந்து வண்டியில் தூக்கி போட்டு சென்றபின்னே கடைகளிலும், வீடுகளிலும் நின்றவர்கள் இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

_o0o_

Tuesday, October 11, 2011

இரண்டாம் படி: சிறுகதை


சித்தி இந்த ரூபத்தில் வந்து உதவுவார் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பஸ்ஸில் அமர்ந்தபடி நாலு பக்கமும் திரும்பி பார்த்துக்கொண்டான். வெளியில் தெரிந்த இருட்டு லேசாக பயமுறுத்துவதாக இருந்தது. ஏதோ ஒரு பக்கத்திலிருந்து அவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனதை அரித்துக்கொண்டிருந்தது.


கொஞ்சநாட்களுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாய் படித்த மகேஷ்பாபுவை கும்பகோணம் பஸ்ஸாண்டில் வைத்து பார்த்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ந‌ல்ல உயரமாகவும் அழகாகவும் இருந்தான். மூன்றாண்டுகளுக்கு பின் இப்போது கல்லூரி வாழ்க்கையை முடித்து இன்னும் உயரமாகவும், தடித்தும், அழகாகவும் மாறியிருந்தான். தியாகுவிற்கு தான் அப்போதிருந்தே ஒல்லியாக அப்படியே இருப்பதாகப்பட்டது.


அந்த சந்திப்பில் மகேஷ் அவனுக்கு ந‌ல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியிருந்தான். சொன்னபடி போனும் செய்தான். அடுத்தநாள் காலையில் பங்கிற்கு செல்லும்போதே சைக்கிளை வேகமாக மிதிப்பதாக தோன்றியது. கல்லாவில் அமர்ந்து துணியால் டேபிளை தட்டும்போது பெட்ரோல் போடும் பன்னீர், ‘என்ன தியாகு, ஒரே சிந்தனையா இருக்காப்ல தெரியிது,’ என்று கூறியபடியே உள்ளே சென்றான். இன்னும் முதலாளி வந்திருக்கவில்லை. பன்னீர் கூறியது எரிச்சலாகவும் உடனே க்ண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து சரி செய்துகொள்ள வேண்டும் என தோன்றியது. அடக்கி கொண்டான். மேலும் கேள்விகள் கேட்டு எண்ணங்களைத் தெரிந்து கொண்டுவிடுவானோ என பயமாக இருந்தது. அவனைப் பார்ப்பதையே தவிர்த்தான்.


பள்ளிப்படிப்பை முடித்ததும் அப்பாவின் நண்பர் மூலமாக இங்கு வேலைக்கு வந்துவிட்டான். பெட்ரோலுக்கும், ஆயிலுக்கும் சீட்டு கிழித்துக் கொடுத்து, காசு வாங்கி, பின் மொத்த வரவு செலவுக் கணக்கை சரிபார்த்து வீட்டுக்கு போகும்போது முதலாளியிடம் கணக்கை சமர்ப்பித்து செல்லவேண்டும். மூன்றாண்டுகளாக இதே வேலைதான். ஞாயிறு விடுமுறை என்றுபேர், ஒருநாள் சம்பளமாகக் கணக்கில் கொண்டு அந்த நாளும் வரவேண்டியிருக்கும். கல்யாணம், கருமாதி என்றால் உண்டு, மற்ற எந்த நாளிலும் விடுமுறை கிடையாது. பங்க் உரிமையாளர்கள் சங்கப் போராட்டம் போன்ற நாளில்கூட பாதி திறந்துவைத்து விற்றுக் கொண்டிருபார்கள். பாபநாசம் போன்ற சிறிய ஊரில் யார் கேட்கப்போகிறார்கள்.
 
படிக்கும்போது சில ஆசிரியர்கள் தயாரித்து தரும் PKV (பரிட்சைக்குக் கட்டாயம் வரும்) கேள்விகளை கேட்டால் கொடுக்காதவன் என்ன செய்துவிடுவான் என முதலில் தோன்றியது. அவன் சொன்னதுபோல் பாண்டிச்சேரியில் ஒரு வேலை இருப்பதாகவும், பத்து முதல் பட்டதாரி வரை தகுதி என்றும் மேலும் மூன்று நண்பர்கள் வருவதாகவும், நீயும் நாளை கும்பகோணம் வந்துவிடென்று கூறியிருந்தான்.


பாண்டி என்றதும் தயக்கமாக இருந்தது. உள்ளூர் என்றால் பரவாயில்லை, இத்தனை தூரம் சென்று வேலை கிடைக்கவில்லையெனில் வீண்செலவுதானே என யோசித்தான். அத்தனை பணமும் கைவசமில்லை. பக்கத்தில் மற்றொரு வேலை வரும்போது சென்று கொள்ளலாம், என இதை தவிர்க்கும் விதமாக பாண்டியில் ஒரு சித்தி மட்டுமே இருக்கிறார், வேறுயாரும் தெரியாது என கூறிப்பார்த்தான். தங்குவதற்கும், கம்பெனி பார்த்துக் கொள்ளும், மறக்காமல் வந்துவிடு என்று கூறிவிட்டான். தட்டமுடியவில்லை.
 முதலாளியிடம் லீவு கேட்பது அத்தனை எளிதான காரியமல்ல. பேசும் போது ஊடுருவித் துளைக்கும் கண்களைப் பார்ப்பது அச்சம் தரக்கூடியது. இல்லையென்று கூறிவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்ற தைரியத்தில், பெரியப்பாவிற்கு அறுபது, விசேஷம், இரண்டு நாள் லீவு என்று மெதுவாக கேட்டதும், நீண்ட யோசனையில் இருப்பவர் மாதிரி இருந்தவர் தீடீரென ‘சரி போய்வா,’ என்றார். பொதுவாக அப்படி சொல்பவரல்ல, கேள்விமேல் கேள்வி கேட்பார். பொய் சொல்லி மாட்டிக் கொண்டால் ‘சரி நீ வீட்டிலேபோய் இருந்துக்கோ,’ என்று அனுப்பிவிடக்கூடியவர். அவனும் அப்பாவும் சம்பாதிக்கும் சொற்ப பணம்தான் குடும்பத்தை தாங்குகிறது. அம்மா, தங்கை, ரெண்டு தம்பிகள் - ‍கடைசி தம்பி கொஞ்சம் புத்திசுவாதீன‌மில்லாதவன் - என்று குடும்பம் பெரியது.

அப்பாவிற்குப் பயந்து, அம்மாவிடம் மட்டுமே விசயத்தை சொல்லிவிட்டு, மறுநாள் விடியற்காலையில் கும்பகோணம் வந்து, மகேஷைக் காணும்வரை முதலாளி பற்றிய, வேலைக்கு வேறு ஆளை பார்த்திருப்பாரோ என்ற, அந்த அச்சம் இருந்து கொண்டேயிருந்தது. ‌அவனுக்கு, மகேஷுடன் வந்திருந்த மூன்று நண்பர்களின் உற்சாகம் மெல்லத் தொற்றிக்கொண்டது. இதுநாள் வரை ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாகவே எண்ணினான். அறிமுகப்படுத்தப்பட்ட மூவரில் - பாலா, முருகேசன், மணி‍ - பாலா மகேஷின் உதவியாளனாகவே செயல்பட்டான். மகேஷ் ஏதாவது கூறும்போது அடிக்கடி ‘மாப்ள, நீ சொன்னா சரியாதான்டா இருக்கு,’ என்றான். மகேஷ் அனைவரையும் வழிநடத்திச் சென்றான. எல்லா விசயங்களும் அவனுக்கு தெரிந்திருந்தன. கடலூரில் இறங்கி, சாப்பிட்டுவிட்டு பாண்டிக்கு பஸ் ஏறினர்.


மூன்றாண்டுகள் பங்கைவிட்டு எங்கும் செல்லாமல் இருந்ததால், எல்லா இடங்களும் புதியதாக, அப்போதுதான் பார்ப்பது போலிருந்தன தியாகுவிற்கு. பாண்டிச்சேரி வரும்வரை மற்றவர்களுடன் எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்களுக்கு இருந்த வேகம், மற்றவர்களுடன் சகஜமாகப் பழகும்முறை எல்லாம் தனக்கு மட்டுப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பாண்டியில் இறங்கி ஒரு டவுன் பஸ்ஸில் ஏறியபோதுதான் ஒரு சந்தேகமாக‌ புதிய வேலையைப் பற்றி மகேஷிடம் கேட்க ஆரம்பித்தான்.


அவன் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த நபர்களுக்குத் தகுந்த வேலையிருப்பதாக வந்த பத்திரிக்கை விளம்பரத்‌தை காண்பித்தான். அதில் சொல்லப்பட்டதிலிருந்து அது ஒரு சிமெண்ட் ஃபேக்டரி என் புரிந்தது. வேலை நிச்சயம், பயப்படதேவையில்லை என்று தைரியப்படுத்தினான் மகேஷ்.


பஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில வீடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகைத் தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் ஃபேக்டரி வந்தது. கடற்கரைக்குச் சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.


அந்த பகுதி ஊரிலிருந்து மிகவும் தள்ளியிருப்பதாகப்பட்டது. வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் பேசி நேரம் குறித்துக்கொண்டான் மகேஷ். இவர்களை தவிர வேறுசிலரும் நேர்காணலுக்காக அந்த அறையில் இருந்தார்கள். இம்மாதிரி இடங்களுக்கு வருவது தியாகுவிற்கு முதல் முறை. அழகான கட்டமைப்பில் இருந்தது அந்த அறை. மெத்தென்று இருக்கும் பெரிய சோபாக்கள், சேர்கள், அலங்காரப் பொருட்கள் என்று அறை முழுவதும் நிறைந்திருந்தது. சிறிய செயற்கை நீருற்று நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வண்ணங்கள் மாறுபடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். மிக சங்கோஜமாகக் கைகால்களை எங்கே வைத்துக் கொள்வது என்று திணறியபடி இருந்தான். ஆனால் சந்தோஷமாக இருந்தது.


ஒவ்வொருவராக உள்ளே அழைத்துப் பேசினார் மேலாளர். தனக்கு வேலை கிடக்க போவதில்லை என தோன்றியது. சற்று நேரத்தில் வெளியே வந்த மேலாளர் வந்திருந்தவர்களை அழைத்து வலித்து சேர்க்கப்பட்ட ஒரு உற்சாகத்துடன் இந்தியாவில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்று எனவும், இதை முதல் பத்து இடத்திற்கு கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை எனவும், ஆகவே உங்கள் அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகப் பேசி முடித்தார். சிலருக்கு நாலாயிரமும், சிலருக்கு மூவாயிரமும் அவர்களின் தகுதிப்படி அறிவித்தார். செய்யும் வேலைகளைப் பொருத்து அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்தப் பணம் தியாகுவிற்கு மிக அதிகம், அவன் நினைத்தும் பார்க்காதது, அத்தோடு யாரும் இத்தனை உற்சாகமாக அவனுடன் பேசியதில்லை‌ மகிழ்ச்சியில் திளைத்தான்.


அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் கட்டிடத்திலிருந்து வெளியே உள்ளடங்கி அமைந்திருந்தது. சிறிய கட்டிடம் ஆனால் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தது. அறைகளின் நடுவே ஹாலில் தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, சேர், உடற்பயிற்சி உபகரணங்கள் என அனைவரும் பயன்படுதுமாறு வைக்கப்பட்டிருந்தன, சிலர் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டும், சிலர் அரட்டை அடித்துக்கொண்டுமிருந்தனர்.


பொருட்களை வைத்தபின் அங்கு வந்த ஒருவர், அனைவரையும் அழைத்துச் சென்று தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பித்தார். வரவேற்பறையிலிருந்து சற்று தள்ளி தனியே பிரிந்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே, இத்தனை மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றிருந்தது. மகேஷ் போன்றவர்களுக்கு வேதியியல் படித்திருந்ததால் லேபில் வேலை, சிலருக்கு குடோனில் வேலை, தியாகுவிற்கு உதவியாளனாக இயந்திரத்திலிருந்து வரும் சிமெண்டை பைகளில் பிடித்து அடுக்கி வைக்கும் வேலை. அதிக சிரமமில்லை. அங்கிருந்தவர்கள் அவனை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினர். ஐந்தரை மணிக்கெல்லாம் டாணென்று அனுப்பிவிட்டனர். ஒருமாதத்திற்கு பிற்கு ஷிஃப்ட்முறை கொடுக்கப்படும்.
 
அறைவந்து கண்ணாடியை பார்த்தபோது தான் வயதானவனாகிவிட்டதாக தோன்றியது. தியாகுவின் தலைமுடி, மீசையில் படிந்திருந்த சிமெண்ட் அப்படிஒரு தோற்றத்தை அளித்தது. மூக்கு துவாரத்துக்குள்ளும் சிமெண்ட்துகள்கள் இருந்தன‌. குளித்துவிட்டு வெளியே வந்தபோது மற்ற நண்பர்கள் வந்திருந்தனர். தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூர்தர்ஷன் மட்டும் தெரியும் அந்த‌ தொலைகாட்சிப் பெட்டியில் ஒரு ஆவண்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது.


அது சிமெண்ட் தொழிற்சாலையை பற்றியது. ஒவ்வொருவரும் சிரிப்புடன் மற்றவர்களை பார்த்துக்கொண்டு கவனித்தனர். அரைமணி நேரம் ஓடிய அந்தப்படம் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் கண், நுரையீரல் கோளாறுகளை பற்றியும், கான்சர் போன்ற் வியாதிகளைப் பற்றியும் விரிவாகக் கூறியது. எதிர்பாராத கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிபோல, அந்த நிகழ்ச்சி முடிந்தபோது நீண்ட மெளனம் நிலவியது. முதலில் பேசியது மகேஷ்தான். ‘என்னடா இது’ என்றான். மற்றவர்கள் அவனின் அடுத்த பேச்சுக்காக காத்திருந்தனர்.


‘வேணாம்னு நினைக்கிறேன்டா, கிளம்பிடலாம் என்ன சொல்றீங்க,’ என்றான் சட்டென்று. சிறிய அமைதிக்குபின் பாலா, ‘நீ சொன்னா சரியாதான்டா இருக்கும் மாப்ள,’ என்றான். ’என்னடா சொல்றீங்க’ என்றான் மற்றவர்களைப் பார்த்து, தியாகுவிற்கு மேகமூட்டமாக இருப்பது போலிருந்தது. வந்த சந்தோஷம் வடிந்ததில் குழப்பமாக இருந்தது. ஒவ்வொருவராக பேசி, விவாதித்து தெளிவு பெற்றார்கள், வியாதியைவிட வேலையின்மையே தற்போது நல்லது என நினைத்தனர். பெட்ரோல் பங்கில் வேலை செய்வது உடலுக்கு தீங்கு என்று ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்‌தது. ஆனால் இது அதைவிட மோசமாக இருக்கிறதே.


‘நாளை சனிக்கிழமை, வேலை முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா கிள‌ம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுவோம், அங்க சரக்கு அடிச்சுட்டு கிளம்பிடலாம்,’ என்று மகேஷ் திட்டத்தை கூறியது முதலில் தலையசைத்தான் தியாகு, அதுவே சரியென்றும் தோன்றியது. யாரும் இதைப்பற்றி இங்கு பேசிக்கொள்ளகூடாது என்று உடன்பாடு.


அன்றிரவு ஏதேதோ நினைவுகளுடனும் கனவுகளுடனும் தூங்கினான். இரவு முழுவதும் தன் வாழ்க்கை பற்றிய யோசனையாக இருந்தது. தன் வயது ஒத்தவர்கள் மேலே சென்றுக் கொண்டிருக்கும்போது தான் மட்டும் ஒரு படிகூட முன் செல்ல முடியாமல் தன் வாழ்வு முழுவதும் இப்படியே செல்ல வேண்டியிருக்குமோ என‌ தோன்றியது. ஏதோ ஒன்று பாரமாக நெஞ்சை அழுத்தியது. இன்று தூங்கவே முடியாதா என்று நினைப்பு இரவு முழுவது தொடர்ந்தது.


மறுநாள் முழுவதும் இருநாளாக இல்லாத வீட்டின் நினைப்புடன் இருந்தான். வேலையை முடித்து மாலை அறைக்கு வந்ததுமே குளித்துவிட்டு பெட்டியுடன் ஒவ்வொருவராக கன்னூரில் பஸ் பிடித்து பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர். அனைவரும் கூடியதுமே மீண்டும் ஒரு உற்சாகம் வந்துவிட்டது. முருகேசன் அவனுக்கு தெரிந்த பாருக்கு அனைவரையும் அழைத்துசென்றான். ஐவர் அமரும் சேரில் ஓரமாக அமர்ந்துகொண்டான் தியாகு. உற்சாகம், ஊளைச் சத்தமாக, காட்டுக் கத்தலாக வெளிப்பட்டது மற்றவர்களிடம். சரக்கு அடிப்பதில்லை என்று சொல்ல பயந்து ஒரு பியர் மட்டும் சொன்னான் தியாகு. சைட்-டிஷ், மது என்று ஏகப்பட்டது சொன்னார்கள், ஒரு ரவுண்ட் வந்த‌துமே, ‘தம்பி சரக்கு அடிக்கக் கத்துக்க, சும்மா இந்தமாரி நக்கிகிட்டெல்லாம் இருக்கப்படாது, என்று மாறிமாறி தொடர் அறிவுரைகள் அனைவரும் கூற ஆரம்பித்தனர். புன்சிரிப்போடு தலையசைத்து கேட்டுக்கொண்டான். ஒரே வயதினர் என்றாலும் தம்பி என்று விளிக்குமளவிற்கு தாழ்ந்துவிட்டது அவனுக்கு கவலையளித்தது. பாலா பேசிக்கொண்டேயிருக்கும் போது போதையில் தலை தொங்க ஆரம்பித்தது.


முடிந்ததும் நடந்து, இருட்டில் மின்னிக்கொண்டிருந்த, பேருந்து நிலையம் சென்று கும்பகோணம் பேருந்தை தேடியபோது, சட்டென உறுதியுடன் ஞாபகம் பெற்றவனாக மகேஷைப் பார்த்து ‘ஏ எங்கம்மா ஊறுகா கொடுத்துவிட்டுருக்குடா, இங்க சித்திக்கிட்ட கொடுக்கணும், நாம அங்கயே இருக்கபோறம்ற தைரியத்துல‌ அப்புறம் கொடுத்துகலாம்னு இருந்துட்டேன், இல்லன்னா எங்கம்மா திட்டும், நா கொடுத்துட்டு வ‌ந்துறேன்’.


‘அப்படியா இடம் தெரியுமா, போயிறுவியா’.


‘அதெல்லாம் நா போயிருவேன், நீங்க கிளம்புங்க, நாளைக்கு நாம கும்மோணத்துல பாப்போம்’.


‘வேணும்னா துணைக்கு பாலா வரட்டுமா’


‘இல்லல்ல, நா ச‌ரியாப் போயிடுவேன். நாளைக்கு பாப்போம், வாரேன் எல்லோருக்கும்,’ என்று கூறியபடி கிளம்பினான் எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அவசரஅவச‌ரமாக‌ நிலையத்தின் பின்பக்கமாக ஓடில் கிளம்பி நகர்ந்து கொண்டிருந்த கன்னனூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டான் தியாகு.

Wednesday, September 7, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 3



சிவாஜி குறித்து எழுதியதும் பலர் தங்களது எதிப்பையும், நட்பையும் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, எதிர்ப்பை தெரிவித்தவர்கள் சிவாஜியை வேண்டுமென்றே மட்டம் தட்டுவதுபோல் இருப்பதாக கூறியிருந்தார்கள். முன்பே சொன்னதுபோல் ஆதர்சம் சிதைவதை பொருக்கமுடியாமல் கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிவாஜி என்ற ஆளுமையை அத்தனை எளிதாக தமிழக மக்களின் மனங்களிலிருந்தது எடுத்துவிடுவதும் சாத்தியமானது அல்ல. என் பெரியம்மா சிவாஜியின் தீவிர ரசிகை, எழுபது வயதாகியும் இறப்பதற்கு முன்புவரையும் அவர் வீட்டில் இருக்கும் சின்ன தொலைக்காட்சியின் சிவாஜியின் படங்கள் ஒளிபரப்பாகும்போது தவறாமல் பார்ப்பார். சிவாஜியின் 50கள், 60கள் 70களின் படங்கள் அவருக்கு அத்தனையும் அத்துபடி, காட்சி காட்சியாக விவரிக்க அவரால் முடியும்.

ஆனால் ஒரு முறை பேசும் போது சிவாஜி நல்ல உயரமும் தாட்டியும் கொண்டு கம்பீரமாக இருக்கிறார் என்று சிவாஜியை தொலைகாட்சியில் நடந்துவருவதை பார்த்தபடியே கூறினார். அப்போதைய நடிகைகள் குள்ளமானவர்களாக இருந்ததால் அவருக்கு அப்படி தோன்றியிருக்கலாம். நான் மறுத்து சாதாரண இப்போதைய உயரதைவிட குள்ளம்தான் என்றேன். அவர் கண்களில் தெரிந்த விரோததத்தோடு உடனே மறுத்து கூறினார். அவர் மேல் இருக்கும் அபிமானங்களை மாற்றமுடியாது என்று புரிந்துகொண்டேன்.

அவர் வளர்ச்சிக்கு காரணங்களாக சிலவற்றை கூறலாம்: பல உண்மை கதாபாத்திரங்களை அவர் செய்ததுதான் என நினைக்கிறேன். கூடவே அவர் செய்த பீம்சிங் போன்றவர்களின் யாதார்த்த படங்களில் நடித்ததும்தான். அறுபதுகளின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல், திருவருட்செல்வர், ராஜராஜ சோழன் போன்றபடங்கள் சிவாஜியை வாழும் ஒரு பாத்திரமாக மககள் மனதில் பதியவைத்துவிட்டது. அம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் பீம்சிங் மாதிரியான யாதார்த்த பாணி படங்கள் அவருக்கு நிரம்ப கைகொடுத்தன. அந்த கதாபாத்திரங்கள் நிஜமானதாகவும், மக்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாகவும் உணர்ந்துள்ளார்கள்.

சிவாஜியின் எதிரியான எம்ஜியாரின் பட‌ங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்திருந்தாலும் அதில் யதார்தமாகவும், நிஜபாத்திரங்களும் இல்லாமல் இருந்தும் நடிப்பதற்கு வகையில்லாமல் அமைந்துவிட்டன. ஆனால் அன்பே வா முதற்கொண்டு மலைக்கள்ளன் வரை எந்த பாத்திரமும் அவரின் உடல்வாகுக்கு பொருத்தமாக அமைந்துவிட்டன் என்பதும் உண்மை.

எம்ஜியாருக்கு அழதெரியாது என்பது பொதுவாக சிவாஜி ரசிகர்கள் கூறும் வாதமாக இருக்கும். சிவாஜி அழுவது காட்சிக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவர் அழுவது இயற்கையாக இருப்பதாக நினைப்பார்கள். 5 பைட்டு 6 சண்டை என்பது மாதிரி, 5 அழுகாட்சி 6 மெய்சிலிர்ப்புகாட்சி என்று சிவாஜி ரசிகர்கள் கூறுவார்கள் எனக் கொள்ளலாம்.

சிவாஜி சினிமாவில் நுழைந்த சம‌யம் மிக முக்கியமானது. யாருக்கும் அமையாத அற்புதம் அது என நினைக்கிறேன். இரண்டு துருவ‌ங்களும் முக்கிய நடிகர்களுமான பாகவதரும், சின்னப்பாவும் விலகிய காலம் அது. நல்ல நிலையில் சினிமாவில் கொடிகட்டி பறந்த‌ பி.யூ.சின்னப்பா,  உச்ச நிலையில் இருக்கும்போதே திடீரென காலமானார். எதிர் துருவமோ கொலை, கைது என்று அழைக்கழிக்கபட்டு நிம்மதிய‌ழந்து தோல்விபடங்களாக கொடுத்து அவரும் திடீரென காலமானார். அம்பதுகளில் ஆரம்பத்தில் சட்டென ஒரு உயரத்திற்கு வந்த சிவாஜிக்கு நல்ல இடம் கிடைத்தது. சின்னப்பா செய்த உத்தமபுத்திரன் போன்ற படங்களை மீண்டும் செய்து தன்னை அடுத்த வாரிசாக நிறுவிக்க்கொண்டார். அவரே எதிர்பாராத ஒரு பாய்ச்சலுடன் சினிமாவில் நுழைந்ததும், வெற்றிடமாக கிடந்த மக்கள் மனங்களில் சட்டென சிம்மாசனத்துடன் அமர்ந்துகொண்டார். (அதே போல் எம்ஜியாரும் மற்றொரு இடத்தை பிடித்துக்கொண்டார்.) பின்பு மக்கள் மனங்களில் இருந்து அவரை பிரிக்கமுடியவில்லை. தொடர்ந்து எழுபதுகளின் ஆரம்பம்வரை ஒரு பெரும் பேரரசனாக‌ கொடிகட்டி பறந்தார்.

ஆனால்...

(மீண்டும் பார்ப்போம்)

_o0o_

Tuesday, August 30, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு 2

சிவாஜியின் மிகைநடிப்பைப் பற்றி மீண்டும் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. ஒரு எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விசயம் வேடிக்கையாகவும் சிந்திக்கும்படியாகவும் இருந்தது.

முதல்மரியாதை படத்திற்காக சிவாஜியை ஒப்பந்தம் செய்துவிட்டு, நீங்கள் ஒரு இந்தபடத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் பண்ணையாராக‌ நடிக்கிறீர்கள். உங்கள் மனைவி சரியில்லை, உங்களிடம் ஒரு சோகமிருக்கிறது என்று சொல்லிவிட்டுவந்து விட்டார்கள் உதவி இயக்குனர்கள். மறுநாள் எப்போதும்போல முதலில் வந்துவிடும் சிவாஜி இதற்கு முந்தைய படங்களைப் போல‌ பண்ணையாருக்கு தேவையான மேக்கப்பான, வெள்ளை விக், மீசை, அங்கவஸ்திரத்தோடு அமர்ந்திருந்தாராம். வந்ததும் பார்த்த இயக்குனர் வெறுத்துபோய் வேறு இடத்திற்கு போய் அமர்ந்துகொண்டாராம். அவர வீட்டுக்குபோ சொல்லுங்கபா, இன்னிக்கொன்னும் என்னால படம் எடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். உதவி இயக்குனர்கள் கூறியதை கேட்டு எனக்கு இன்னைக்கு காட்சி இல்லையா என அப்பாவியாக கேட்டாராம் சிவாஜி.

அறுபதுகளிலேயே அவரின் மிகைநடிப்பை விரும்பி வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். இப்போதுகூட அதை விரும்பும் ஒரு கூட்டம் இருப்பதை மறுக்கமுடியாது. இவைகள் ஒரு நடிகரை பின்னுக்கு தள்ளும் காரணிகள் என்று அவர் அறிந்திருக்கவேயில்லை. அறுபதுகளில் வந்த படங்களை நினைக்குபோது அப்போது மிகைநடிப்புகளுக்கு ஒரு தேவை இருந்ததை ஏற்றுக்கொள்ளவேண்டும். பாலாஜியுடன் அவர் செய்யும் சேட்டைகள், தேவிகாவுடன் அவர் செய்யும் சேட்டைகள் என்று பல படங்கள் நம் நினைவிற்கு வந்து மகிழ்ச்சியூட்டுகின்றனதாம்.

உதாரணமாக இதையே சொல்லலாம், 'சின்னஞ்சிறிய வண்ணபறவை என்னத்தை சொல்லுதம்மா' என்ற பாடலில், அவர் செய்யும் சேட்டைகள் ஒரு காட்சிக்கு இவ்வளவு தேவையா என இன்று கேட்க தூண்டும். 5 ரூவாய்க்கு நடிக்க சொன்னா 50 ரூவாய்க்கு நடிக்கிறாரு என்ற 'சொலவடை' நிச்சயமாக அவருக்கு பொருந்தியே தீரும்.

பின்னாளில் அவர் உடலும் மனமும் நடிப்பிலிருந்தும், சினிமாவிலிருந்தும் விலகிவிட்டதை அறிந்துகொள்ளமுடியும். முதல் மரியாதை, தேவர்மகன் தவிர‌ எழுபதுக்குபின் வந்த படங்கள் (ஆரம்ப எழுபதுகளில் வந்த படங்களை தவிர) எதுவும் அவரின் மற்ற பட‌ங்களை மிஞ்சி நின்றதில்லை. அலுப்பும் சோர்வுமாக ஒரேமாதிரியான உடலசைவுகளுடனும், நடிப்பிலுமாக படங்கள் வெளிவந்துள்ளன. அவரால் மீண்டும் பதிய உத்வேகத்துடன் நடிக்கமுடியவில்லை.


அமீர்கான் நடிப்பில் வெளியான தாரே சமீன் பர் படத்தை முதலில் இயக்கிய இயக்குனரை, அவரின் இயக்கம் பிடிக்காமல், நீக்கிவிட்டு தானே மற்றகாட்சிகளை எடுத்து வெளியிட்டார் அமிர். அதேபோல் தேவர்மகனில் பரதன் இயக்கம் பிடிக்காமல் தானே மற்ற காட்சிகளை இயக்கினார் கமல். ஏனெனில அவர்களுக்கு தெரிந்திருந்தது அந்த படத்தில் அவர்களின் பங்கு பற்றி. சிவாஜியை பற்றி குறைகூறும்போது சொல்லப்படும் வார்த்தைகளில் பிரதானமானது அவருக்கு இயக்குனர்கள் ச‌ரியாக அமையவில்லை என்பதுதான். அதுவல்ல காரணமென்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

சிவாஜியின் நடிப்பை பார்த்த மர்லன் பிரான்டோ இப்படி சொன்னாராம். 'சிவாஜியை போல் என்னால் ந‌டிக்க முடியாது'. அது அவரின் பெருந்தன்மையை குறிக்கிறது, ஆனால் சிவாஜியால் மர்லன் பிரான்டோவின் நடிப்பை நினைத்துகூட பார்க்க முடியாது.

_o0o_

Wednesday, August 17, 2011

சொல்வனம் 54ல் என் ஒரு கதை!!

அன்பர்களுக்கு,

ரொம்ப நாளாக மனதில் இருக்கும் விசயம் இது. நமக்கு வலியவந்து உதவும் வயதானவர்களை, அவர்கள் வெள்ளேத்தியாக இருக்கும் ஒரே காரண‌த்தினால், அவர்களின் உதவிகள், உழைப்பை உருஞ்சிவிட்டு தூக்கியெரியும் செயலை என்னவென்று சொல்வது. அதைதான் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன்.

இக்கதை மறுபடியும் சொல்வனத்தில் வந்ததில் பெருமையடைகிறேன்.



http://solvanam.com/?p=16360

_o0o_

Thursday, August 4, 2011

சிவாஜியின் மிகைநடிப்பு


சிவாஜி எம்ஜியார் காலம மட்டுமல்ல, சின்னப்பா பாகவதர் காலத்திலும், அதற்கு முன்னால் கிட்டப்பா காலத்திலும் இப்படி ஒரு வெகுஜன‌ கூட்டம் இருந்திருக்கிறது. அவர்களது ஆதர்சத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல் இப்படி புலம்பியும் இருப்பார்கள். இதற்கு உணர்ச்சி வசப்படாமல், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்துடன் அணுகுவதுதான் சிறந்தவழி. சிவாஜியை மிகை நடிப்பு எனறு காரணமில்லாமலா கூறுவார்கள், அவர் தமிழகத்தில் பிறந்துவிட்டதால் அப்படி சொல்வார்களா? மிகைநடிப்பு நடிகர்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். நமக்கு தெரிவதில்லை, காரணம் மிகைநடிப்பு அந்தந்த இடத்திற்கு பொருந்தகூடியது. மிகைநடிப்பில்லா சிறந்த நடிப்பே மொழிகளையும், இனங்களையும் தாண்டி நம்மை வந்தடைகிறது என்று நினைக்கிறேன். ஜெயன் மலையாளத்தில் மிகைநடிப்பு நடிகர், நம‌க்கு இங்கு தெரியாது.

நாடகத்தில் நடந்துகொண்டே நடிக்கவேண்டும், வசன உச்சரிப்பு சரியாக வருவதற்கும், உணர்ச்சிகளை காட்டுவதற்கும்; வசனமும் பாட்டும்தான் அப்போது நடிப்பு. சினிமா அப்படியல்ல, லாங்சாட், குளோசப் தவிர எனைய பக்கங்களிலிருந்தும் காமிராக்களை பொருத்தி உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். அது இயக்குனரின் தேர்வும், திறமையையும் பொருத்தது. அதை புரிந்துகொண்டு நடிக்க நடிகருக்கு தெரிவது சினிமாவில் அவசியம்.

சிவாஜியை பொருத்தவரை கட்டபொம்மன் போன்ற படங்களில் மிகைநடிப்பு கவரப்பட்டதால் அதை தொடர்ந்து செய்தார். அதுவே அவரது பாணியாகவும் ஆகிவிட்டது, அவரால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத் இன்னபிற படங்கள் ஒரே மாதிரியானவைதான். ஒரே பாணி படங்களை செய்ய போதுவாக எந்த நடிகரும் செய்யவிரும்புவதில்லை. ஒரே பாணியில் மாட்டிக்கொண்டு வேறுமாதிரி நடிக்க முடியாத அவரால் சில இயக்குனர்களால் மிகுந்த முயற்சி செய்து முதல் மரியாதை போன்றபடங்களை எடுக்கமுடிந்தது.

வசனங்களும் காட்சிகளும் ஒரு பாத்திரத்திற்கு அதன் சூழ்நிலைகளுக்குமானது. ஒரு குறிப்பிட்ட நடிகருகானது அல்ல என நினைக்கிறேன். உதாரணமாக பரிச்சைக்கு நேரமாச்சு என்ற படத்தில் சிவாஜிக்கு பதில் வேறுஒருவர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். அந்த மிகைநடிப்பும், அதிக வசனங்களும், காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கும் அல்லவா? ஒரு நிஜதன்மை கிடைத்திருக்கும் அல்லவா? சிவாஜிக்கு நன்கு அழதெரிந்திருக்கிறது என்பதற்காக எல்லா படத்திலும் அவரின் எல்லா பாத்திரங்களும் ஒரே பாணியில் அழுதுகொண்டிருக்கவேண்டுமா?

ரசிகர்களின் உந்துதலால் தான் தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடித்து ஒரு நடிகர் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் போன்றவர்கள் இந்த வகையினர் தாம். எம்ஜியார், கமல், சூர்யா, விக்ரம், போன்றவர்கள் ஒரேவகையில் மாட்டிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ தங்களை மாற்றிக்கொண்டவர்கள். தேசிய விருது என்ற அங்கிகாரம் மிகைநடிப்பு இல்லாததால் தான் இரண்டாம் வகையினருக்கு கிடைத்தது என கொள்ளலாம்.

_o0o_

Monday, June 13, 2011

சொல்வன‌த்தில் என் மற்றொரு சிறுகதை

 
அச்சு இதழ்களைவிட இணைய இதழ்களின் வேகம் அதிகம்தான். பஸ்ஸாண்ட் என்ற கதை கொஞ்சநாள் முன்பு வந்தது, சொல்வன‌ம் 51 இதழில் என் மற்றொரு சிறுகதை வெளியாகியுள்ளது. நாஞ்சில்நாட‌னின் கவிதையுடன் பக்கத்தில் என் கதையை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது.
http://solvanam.com/?p=15647
 -o0o-

Monday, May 9, 2011

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
பாவண்ணன்
எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார். பிறகு, நீண்ட காலத்துக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் இரா.முருகன், கோணங்கி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நான் என பலரும் அந்த இதழில் தொடர்ந்து எழுதினோம். எங்களுக்கு முன்னால் சா.கந்தசாமி, ஆதவன், விட்டல்ராவ், பிரபஞ்சன், மாலன் என இன்னொரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதினார்கள். அசோகமித்திரனைத் தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.
அறுபதுகளில் நியுயார்க் டைம்ஸ் என்னும் ஆங்கில இதழுக்கு வேலை செய்வதற்காக கி.கஸ்தூரிரங்கன் தில்லிக்குச் சென்றார். இதுபோலவே, வேலை நிமித்தமாக தில்லிக்குச் சென்ற எஸ்.ஜெகன்னாதன், ஆதவன், ரங்கராஜன் என்கிற சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.நா.சுப்பரமணியன், தி.ஜானகிராமன் ஆகியோர் தற்செயலாக ஒன்றுகூடி ஓர் தமிழிதழைத் தொடங்கினார்கள். அதுதான் கணையாழி. கஸ்தூரி ரங்கன் காந்தியச்சார்பு உடையவர். அவருடைய பல அரசியல் கட்டுரைகள் காந்தியச்சிந்தனையை முன்வைப்பவை. பிற்காலத்தில், கணையாழிக்கு வெளியே ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி ஸ்வச்சித் என்னும் அமைப்பை உருவாக்கி தொண்டு செய்துவந்தார். ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகு இதழோடு தொடர்புடையவர்கள் அனைவருமே தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்கள்.
கணையாழியில் சுஜாதா எழுதி வெளிவந்த கடைசிப்பக்கங்கள் பகுதி வாசகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி. காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் ஆகிய ஆதவனின் நாவல்களும் தி.ஜானகிராமனின் நளபாகம் நாவலும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று நாவலும் கணையாழியில் தொடராக வெளிவந்த படைப்புகள். இந்திய மொழிகளில் சிறந்த பத்து நாவல்கள் என்னும் க.நா.சு.வின் தொடரைக் கணையாழி வெளியிட்டது. முஸ்தபா என்னும் பெயரில் கஸ்தூரிரங்கன் தொடர்ச்சியாக பல கட்டுரைகள் எழுதிவந்தார்.
தி.ஜா. மறைவையொட்டி கணையாழி குறுநாவல் திட்டம் ஒன்றை அறிவித்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்பட்டு வந்தது. பெயர்பெற்ற எழுத்தாளர்கள் முதல் அறிமுக எழுத்தாளர்கள் வரை இத்திட்டத்தில் பங்கேற்று குறுநாவல்களை எழுதினார்கள். தமிழில் குறுநாவல்கள் வளர்ச்சியில் கணையாழிக்கு பெரும்பங்குண்டு.
கஸ்தூரிரங்கன் தினமணி நாளேட்டுக்கு சில ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அச்சமயத்தில் தினமணி கதிரில் ஒரு தொடர் எழுதவும் செய்தார். ஆனாலும் அந்தப் பங்களிப்பைவிட எல்லோருடைய நெஞ்சிலும் நிறைந்திருப்பது அவருடைய கனவுகளையும் ஈடுபாடுகளையும் தாங்கி வெளிவந்த கணையாழி இதழ் மட்டுமே. கணையாழி இதழை ஓர் இலக்கிய இயக்கம் என்றே அழைக்கலாம். எழுத்து, கசடதபற போல கணையாழியும் ஓர் இயக்கம். ஒரு கட்டத்தில் அது நின்றது. பிறகு அறக்கட்டளை ஒன்றின் வழியாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. மீண்டும் நின்றது. கடந்த சித்திரைத்திங்கள் மீண்டும் அது ம.ராஜேந்திரன் முயற்சியால் உயிர்த்தெழுந்தது. புத்துயிர்ப்போடு அது மீண்டும் தோன்றியிருப்பதைப் பார்ப்பதற்காகவே காத்திருந்த்துபோல, பார்த்துவிட்டு மறைந்துவிட்டார் கஸ்தூரிரங்கன். அவருக்கு நம் வணக்கத்துக்குரிய அஞ்சலி.

Monday, April 11, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை
, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்
,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.
50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை
1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-
Tata, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின்
No. 1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
நாமும் No. 1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த
20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை
??

அடுத்த
5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய
,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ
,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

(மின்னஞ்சலாக வந்த செய்தி அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

Friday, April 8, 2011

அன்னா ஹசாரே யார்?




இதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது.
அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார்.
சரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்?
அண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.
தன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.
நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
பின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
போராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.
ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினார்.
அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார்.
அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.
இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.
மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன.
ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார்.
அத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார்.
இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.
அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார்.
ஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று!

நன்றி: வெப்துனியா
-o0o-