Wednesday, January 28, 2015

அரசு வேலையும் தனியார் வேலையும்

அரசு வேலை மீது வெறுப்புவர என் அப்பாதான் காரணம். அரசூழியரான அவர் சலிப்புடன் வேலை செல்வதாக தோன்றும். நல்ல உடைகள், கம்பீரமான தோற்றத்துடன் அவர் அலுவலகம் சென்றதாக நினைவில்லை. சில நேரங்களில் சென்றிருக்கலாம். ஆனால் ஒரு அலுப்பு அல்லது உற்சாகமின்மை எப்போதும் இருப்பதை அவர்களிடம் கவனித்திருக்கிறேன். இந்த ஒன்றே அரசு வேலைமீது வெறுப்பை ஊட்ட காரணமாக இருந்திருக்கலாம்.
அரசு வேலைகள் ஒரு காலத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. அப்போது அரசு வேலைகள் தாம் அதிகம் இருந்தன. அதை நம்பியே வாழவேண்டிய தேவை படித்தவர்களுக்கு 70-80ல அப்படி ஒரு நிலை இருந்தது. தனியார் வேலைகள் கவுரவ குறைவாக, படிபறிவில்லாதவனின் வேலை செய்யும் இடமாக பார்க்கப்பட்டது. 90லில் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. தனியார் வேலைகள் நிறைய அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வர தொடங்கியதும் நிலமை முற்றிலுமாக‌ மாறத் தொடங்கியது.


நான் கெமிஸ்டிரி படித்திருந்ததால் முடித்ததும் ஒரு ரசாயண நிறுவனத்தில் கெமிஸ்டாக வேலைக்கு சேர்தேன். ஆனால் கொஞ்ச நாளில் அந்த கம்பெனியை மூடிவிட்டார்கள். சயின்ஸ் எடிட்டராக சென்னையில் வேலைக்கு சேர்ந்தேன் பின் தில்லியில் பின் மீண்டும் சென்னையில் பின் புனேயில் என்று வேலைப் பார்த்து வருகிறேன். எல்லா வேலையும் தனியார் வேலைதான். சென்னை வேலை வருவதற்கு முன்னால் சின்னச் சின்ன வேலைகள் செய்திருக்கிறேன். டைப்பிஸ்ட், கம்பியூட்டர் டைப்பிஸ்ட் என்று பலவேலைகள் செய்திருக்கிறேன். எல்லா வேலைகளிலுமே ஒரு நிரந்தரமின்மை எப்போது உண்டு. எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கிவிடும் நிலை இருந்தது. ஒரு முறை வேலைவிட்டு தூக்கவும் பட்டிருக்கிறேன்.
ஆனால் அப்போதெல்லாம் அரசாங்க வேலைக்கு செல்லவேண்டும் என நினைத்ததில்லை. சில அரசியல் தலைவர்களின் முயற்சியுடன் செல்லமுடியும் என்று தான் வழிகாட்டுவதாக அந்த அரசியல்தலைவரே எனக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் எனக்கு அப்போது அரசு வேலைமீது அத்தனை ஆர்வம் ஏற்பட்டதில்லை. நிறைய சம்பாதிக்க முடியாது, சிறுநகரங்களில், கிராமங்களில் வேலை செய்யவேண்டியிருக்கும், லஞ்சம் வாங்க வேண்டியிருக்கும், நாம் விரும்பும் இடத்தில் இருக்க முடியாது என்று பலவாறு நினைத்திருந்தேன்.
ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட வயது தாண்டிய பின் அரசு வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் அதே அலுப்புதான். எத்தனை நன்றாக வேலை செய்தாலும் எத்தனை முயற்சிகளில் நம் மேல் உள்ளவர்களிடம் திருப்தி செய்தாலும் இதைவிட அதிகம் எதிர்ப்பார்க்கிறோம் என்கிற மோசமான நிலைதான் இன்றும் இருக்கிறது.
டார்கெட் என்று ஒன்று இருக்கும் பட்ச‌த்தில் ஒவ்வொரு ஆண்டும் அதை அதிகரித்து கொண்டே நாம் செய்யமுடியாத எல்லைக் கோட்டைதான் எப்போது வரைத்து வைப்பார்கள். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் உயரவில்லை என்றாலும் உயர்ந்து வருவதாகவும், நீங்கள் உங்களை உயர்த்திக்கொள்ளவில்லை என்று நம் மேல் இருக்கும் துறையினர் கூறிக்கொண்டிருப்பார்கள். ஒப்பிட்டு பார்க்கும்போது சம்பளத்தைவிட அதிகமே வேலைசெய்வதாக தோன்றும்.
அரசு வேலைகளில் சில மிக கேவலமாக நடத்தப்படுவதாக சொல்லப்படுவதும், சில நேரடியாக கவனித்தும் இருக்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சுவருக்குள் நடப்பதும் அது அவர்களின் நட்த்தைதான் காரணம் என்பதை நாம் அறியலாம். அத்தோடு அதன் தொடர்ச்சியை கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தவிர்த்துவிடக் கூடியதாகவும் இருக்கிறது. கண்ணியமான ஒரு அரசூழியராக தொடரமுடியும்.
ஆனால் தனியார் துறையில் எல்லாமே நிறுவனம்தான் முடிவு செய்கிறது. அவர்களின் தாளங்களுக்குதான் நாம் ஆடவேண்டியிருக்கிறது. பார்க்கும்போது முதலில் அப்படி தெரியாது. எல்லாமெ நாம்தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம்.
இருவகை தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒன்று நேரடியான இந்திய தனியார் மற்றொன்று வெளிநாட்டு தொடர்புடைய ஐடி துறை தனியார். இந்திய தனியார் துறைகளில் வேலை செய்திருக்கிறேன். எப்போது முதலாளி வருகிறாரோ அத‌ற்கு முன்பே வந்துவிடவேண்டும், எப்போது அவர் போகிறாரோ அதற்கு பின்னே தான் வீட்டிற்கு போகவேண்டும். முதலாளிக்கு ஜால்ரா அடிக்க தெரியாமல் அல்லது அடிக்க மறுத்தால் எவ்வளவு திறமையான வேலையாளாக இருந்தாலும் சுமாரான மற்றொருவர் கிடைத்ததும் கழட்டிவிடப்படுவீர்கள்.
எந்த தனியார்ப் பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர், தலமையாசிரியருக்கும் தாளாளருக்கும் பல்லிளிக்காமல் இருக்க முடியாது. முதலாளி நேரடியாக தொடர்புடைய எந்த நிறுவனத்திலும் அங்கு வேலைசெய்பவர்கள் அவரின் வீட்டு வேலையாள்போலத்தான்.
ஐடி நிறுவனங்கள் வந்ததும் கொஞ்சம் நிலைமை மாறியதாக இருந்தது. இந்திய நிறுவனங்கள் அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் அப்படி முற்றும் தீர்ந்ததாக சொல்லமுடியாது. எவ்வளவு நல்லவேலை சம்பளம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் அதில் இருப்பவர்களுக்குதான் தெரியும் அதன் கஷ்டங்கள். கண்களைவிற்று சித்திரம் வாங்குகிறோமா என்று அவர்கள் எப்போதாவது நினைக்கத்தான் செய்கிறார்கள். 

No comments: