Wednesday, February 18, 2015

நாப்கின்கள்


கொச்சி நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பெண்கள் நாப்கின்கள் அணிந்துவருக்கிறார்களா என்பதை கண்டறிய சோதனைச் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அதற்கு காரணம் அதை பயன்படுத்தியபின் கழிவறையில் போட்டுவிடுவதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் சாக்கடையில் பிரச்சனை ஏற்பட்டுவிடுவதை தடுக்க வேண்டும் என‌ நிர்வாகம் நினைக்கிறது. அதற்காக பெண்கள் பயன்படுத்திய நாப்கின்களை திரும்ப தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என கட்டளையிட்டுள்ளது. ஆகவே அங்கு வேலைப் பார்க்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திரும்ப அவர்கள் பேகில், டிபன் பாக்சில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். இதை அறிந்த பெண்ணிய அமைப்புகள் அங்கு தொடர்ந்து நாப்கின்களை கொரியரில் அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் பொதுவில் நாப்கின்களை எடுத்து செல்வது போன்றவைகள் அசிங்கமாக பார்க்கபடுவது உண்டு. நாப்கின் பயன்படுத்தும் முறை கிராமத்தில் பெரிய அளவில் பரவவில்லை. கிராமங்களில் சில பெண்கள் பயன்படுத்தி அதை குப்பையில் போடும்போது அதைப் பார்த்தோ அல்லது யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் வீடு தேடிவந்து இப்படி குப்பையில் பொறுக்க முடியாமல் திட்டி செல்லும் பாட்டிகள் உண்டு.

பெண்களுக்கு அடுத்து சிறு குழந்தைகளுக்கு நாப்கின்கள் பயன்படுத்தும் முறைமை எல்லா இடத்திலும் எளிதாக பரவிவிட்டது. சுகாதாரம், உயர்மட்டம், எளிது, போன்றகாரணங்கள் சொல்லப்பட்டு இப்போது அனைத்து மக்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுகாதாரம் போன்ற விஷயங்களைத் தாண்டி நாப்கின்களின் பயன்பாட்டால் உடலில் தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை ஒன்று உள்ளது. இதைத்தாண்டி மற்றொன்று உண்டு. அது சுற்றுசூழல் மாசு. ஆம், இந்த நாப்கின்கள் மட்க 800 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதில் உள்ள ரசாயணப் பொருட்கள் மட்க நாட்கள் எடுத்துக்கொள்வதோடு நிலத்திற்கு தீங்கும் இருக்கிறது. புதியதாக ஜெல்லி நாப்கின்கள் வர ஆரம்பித்துள்ளன. இதில் அதைவிட அதிக நச்சுதன்மை அதிகம்.
ஒரு ப்ளாஸ்டிக் பையைவிட ப்ளாஸ்டிக் பாட்டிலைவிட மட்க அதிக காலம் எடுத்துக்கொள்ளும் நாப்கின்களின் பயன்பாடு உலகில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 17000 நாப்கின்களை பயன்படுத்துவார் என்று ஒரு சர்வே சொல்கிறது, பெண்களில் சரிபாதியாவது பயன்படுத்துவார்கள், அதை நிலத்தில் எறியும்போது ஏற்படும் தீங்கு கம்யூட்டர் பாகங்கலைவிட அதிகம் என்று கூறப்படுகிறது. பிறகு குழந்தைகளின் நாப்கின்கள் வேறு உண்டு.
முன்பு பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தார்கள். ஆனால் இன்று எல்லா பெண்களும் படிப்புக்கு, வேலைக்கு, என்று வெளியே செல்ல‌வேண்டும்போது நாப்கின்களின் தேவையும் அதிகரிக்கிறது. ஒருவகையில் இது புரட்சியின் குறியீடுதான். ஒருவகையில் பெண்களின் அடிமைதனத்தை அகற்றியது என்றும் சொல்லலாம்.
இன்றைய தேதியில் அவைகளைப் பயன்படுத்தாமலும் இருக்கமுடியாது அதேவேளையில் அதற்கு மாற்றும் கண்டுபிடிக்க வேண்டிய காட்டாயத்தில் இருக்கிறோம். ப்ளாஸ்டிக் பொருட்களையே தடைசெய்ய முடியாதபோது இதை தடைசெய்ய முடியுமா தெரியவில்லை. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று இல்லாதபோது இதற்கு மாற்று வருமாத் தெரியவில்லை. ப்ளாஸ்டிக் பொருட்களை சிலவைகளை மறுசுழற்சி செய்யமுடியும் ஆனால் நாப்கின்களை அப்படி செய்யமுடியாது. பயன்பாட்டை குறைப்பதும் தீங்கு தராத புதியவகை நாப்கின்கள் கண்டுபிடிப்பது முடியும்.

No comments: