Wednesday, September 16, 2015

வாகனம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இன்றைய தேதியில் பைக் வைத்திருப்பது ஒரு கெளரவமான விஷயமாக கொள்ளப்படுவதில்லை என்றார். அப்போது உண்மையில்லை என்று தோன்றியது. சில வருடங்களிலேயே பல்வேறு மாடல்கள் வந்து பைக் என்பது சாதாரண ஒரு நுகர்வுப் பொருளாக மாறி எல்லோர் கையில் இருந்தது. ஒரு புதுமாப்பிள்ளைக்கு பைக் வாங்கும் வரதட்சனை பந்தாக்கள் பெரிய கவனிப்புகளுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மாமாவிடம் ஒரு டிவிஎஸ் வண்டி இருந்தது.
அதை அவர் தினம் காலையில் துடைப்பதும், அந்த வழிய எடுத்துச் செல்ல குளத்திலிருந்து கலிமண்ணை எடுத்துவந்து கொட்டி கெட்டி படுத்தியிருந்தார். மழைகாலத்தில் சாதாரண மணலை போட்டால் கரைந்து ஓடிவிடும் என்பது அவரது எண்ணம். அந்த நேரம் அந்த தெருவில் இருந்தவர்களிடம் சைக்கிள் தான் இருந்தது. என் அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதை ஓட்டவே அவருக்கு சிரமாக இருந்தது. ஆனால் புல்லட், லம்படார் போன்ற கனமான வண்டிகளை வைத்திருந்தவர்கள் பரம்பரை வண்டி ஓட்டிகளாகவோ அல்லது பெரிய பலசாலியாக அல்லது வைத்திருக்கும் பணத்தை பந்தாவிற்கே செலவழிக்கும் ஒரு வகையினர் மட்டுமே வைத்திருந்தனர்.


புதிதாக வண்டி வாங்குபவர்களுக்கு டிவிஎஸ் எளிமையான ஒரு வண்டியாக‌ வந்திருந்தது. அதற்கு இருக்கும் கிராக்கி சொல்லி புரிய வைக்க முடியாது. இன்று அந்தமாதிரியான வண்டிகள் இல்லை. புதிய புதிய வகையிலான வண்டிகள் வந்துவிட்டன. பெண்களுக்கு தனியாக, ஆண்களுக்கு தனியாக என்று. முன்பு ஆண்கள் வண்டியை தான் பெண்களும் ஓட்டவேண்டும். ஆண்கள் வண்டிகள் சிசி பொருத்து பல மாடல்கள் உண்டு. ஒரு டிவிஎஸ் மட்டுமல்ல பல்வேறு வண்டிகள் ஒரு நூறுவகைகளாவது இருக்கும். எவ்வளவு மயிலேஜ் என்பதை கணித்து வண்டிகளை வாங்க முடியும் கூடவே தேவைப்படும்போது வண்டிகளை எக்ஸ்சேஸ் பாணியில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.
பெட்ரோல் பயன்படுத்துவது அதிக செலவீனம், சுற்றுசூழல் மாசு போன்றவைகளை தாண்டி இப்போது கார்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரு மத்திய நடுத்தர‌வர்க்கம் அதிவேகமாக வளர்ந்துவருகிறது. அவர்களின் தேவைகளுக்கும், கவுரவத்திற்கும் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் கார்கள் அதிகரிக்க தேவையான இடங்கள் இல்லை என்கிற வாதம் பொய்யாகிக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இருசக்கர வாகனங்க‌ள் (பைக்) அதிகரித்தபோது புள்ளிவிவரங்கள் கொண்டு எப்படியெல்லாம் அதிகரிக்கிறது எப்படி சுற்றுசூழல் மாசாகப்போகிறது என்று பேசப்பட்டது. ஆனால் இன்று அதைவிட அதிகமாக கார்கள் விற்பனையாவது அதற்கு தகுந்தார்போல் பல மாடல்கள் கிடைக்கபடுவதும் ஆச்சரியம் அளிப்பதுதான்.
நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் கார் வைத்திருந்தார் என்றால் அந்த பகுதியில் அவர்தான் மிகப்பெரிய பணக்காரராக இருப்பார். இன்று மிகப்பெரிய பணக்காரர்களே தினப்படி செலவிற்கு பணம் இல்லாதவர்களாக இருந்தார் கார் வைத்திருக்க முடியாது. இரண்டுவகை கார்கள் மட்டுமே கிடைத்த காலம் போய் நூறுவகை கார்கள் கிடைக்கின்றன. அதிகமாக‌ 35 கார் கம்பெனிகள் இந்தியாவில் உண்டு அதில் நூறு கார் மாடலாவது இருக்கும்.
எல்லா மனிதர்களாலும் கார் மாடல்களைப் பார்த்து கார்களை வாங்க முடிகிறது. குறைந்த விலையில்கூட கார்கள் கிடைக்கின்றன. அதில்லாமல் பழைய கார்களை வாங்கவும் முடியும். வாரத்திற்கு ஒரு நாள்/இரு நாள் சினிமா அல்லது பக்கத்து ஊர் டூர் குடும்பத்துடன் செல்லவேண்றே கார்களை வாங்கி வீட்டில் வைக்க தயாராக இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் பைக் போன்றே கார் வைத்திருப்பது ஒன்றும் பெரிய கவுரமான விஷயமாக இல்லாமல் போகலாம். அப்போது கார்களை வைத்திருப்பதைவிட வேறு எதாவது வைத்திருக்க பிரியப்படலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருப்பது கவுரவமாக கருதப்படலாம்.
எதுவானாலும் இன்னும் 40 வருடங்கள் தான் அத்ற்குபின் பெட்ரோலியம் தீர்ந்துவிடும். கார்களை தூக்கிபோடவேண்டியிருக்கும் அல்லது வேறு ஒரு எரிபொருள் பயன்படலாம் அல்லது பேட்டரிவகை கார்கள் வரலாம். எதுவானாலும் இன்றைய இதே வகை கார்கள் பயன்படுத்த, தயாரிக்க முடியாமல் போகலாம். அப்போது இந்த கார்களை சூழல் பாதிப்பு இல்லாமல் அழிக்க பெரும் முயற்சிகளை செய்யவேண்டியிருக்கும்.
அதுவரை கார் வைத்திருக்கிறோம் என்கிற அந்த கவுரவத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுவோமாக.

No comments: