Wednesday, July 26, 2017

ஊரும் நகரம்



வளர்கிறது என்கிற எண்ணம் ஒரு சிறுநகரத்தின் மீது ஏற்படும்போதே அது பிரம்மை என்றுகூட எனக்கு தோன்றிவிடுவது உண்டு. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்த நகரம், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்த நகரம் என்று ஒரு சிறுநகரத்தை பலவாறு வகைப்படுத்தி கூறுவது உண்டு. அதற்கு சான்றாக புகைப்படங்கள், காணொளிகளை காட்டுவது உண்டு. மாற்றம் கொண்டுவிடுவதை புதிய பாதைகள் உருவாவது, புதிய குடியிருப்புகள் உருவாவது, புதிய கடைகள் உருவாவது போன்ற சில விஷயங்களைக் கொண்டு கண்டு கொண்டுவிடலாம். ஏன் மனிதர்களின் உடைகளைக் கொண்டும் கண்டுக்கொள்ளலாம். சின்ன நகரங்கள் சற்று பெரிய நகரமாகவும், நடுநகரம் இன்னும் பெரிய நகரமாகவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதே வேளையில் கிராமம் இன்னும் கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் நினைப்பது நகரம் நகருகிறது. மக்களால் ஒரு இடத்தை விட்டு வேறு இடம்சென்று அந்த நகரத்தை சற்று நகர்த்தி வைக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்

Sunday, July 9, 2017

புத்தகத் தேர்வு எனும் கலை



புத்தகத் தேர்வு ஒருவருக்கு உடனே நடந்துவிடுகிறது என்றால் அவர் அவ்வளவாக நல்ல வாசகர் இல்லை என்றும் சொல்லலாம். முன்பு பரவலான வாசிப்புப் பழக்கமும், புத்தகம் வாங்கும் பழக்கமும் இல்லாத சமயங்களில் ஒரு புத்தகத்தின் தேவை நமக்கு நன்கு தெரிந்துவிட்டிருக்கும். நேராகச் சென்று அதை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். செவிவழிச் செய்திகளே நமக்குப் போதுமானதாக இருக்கும். அத்தோடு புத்தகங்களின் எண்ணிக்கைக் குறைவும் புத்தகத் தேர்வை எளிதாக்கிவிடும்

Saturday, July 8, 2017

இலக்கியமும் மேடைப்பேச்சும்




எண்பது வயதாகும் என் தமிழ் ஆசிரியர் அவரின் இளமை காலத்தில் பட்டிமன்றங்களுக்கு அழைக்கப்படுவதும் அங்கே அறிவார்ந்த மக்கள் கூட்டம் குழுமியிருந்து கேட்டு ரசித்ததையும் பலமுறை கூறியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அனைத்து பொருளிலும் பட்டிமன்றங்கள் இருக்கும் என்றார். தொலைக்காட்சி இல்லாத காலம், ரேடியோ எல்லா இடங்களிலும் பரவாத காலம் சைக்கிள்களில் பயணம் செய்து மனிதர்கள் தங்கள் இலக்கிய அறிவையும் படைப்பாற்றலை வளர்ந்துக்கொண்ட நேரம். பின்னால் திக கட்சி வேறுன்றியதும் அதன் முகம் மாறத் தொடங்கியிருக்கிறது. இன்றைய கேளிக்கை வடிவத்தை வந்தடைந்துவிட்டது. பட்டிமன்றங்கள் வெறும் மேடை முழக்கங்களாக உருவாகிவிட்டன.

Friday, July 7, 2017

இலக்கிய சண்டைகள்



இலக்கிய சண்டைகளைப் பார்க்கும்போது ஒரு கோழிமுட்டை அளவில் இருக்கும் இலக்கிய உலகில் இலக்கியம் படைத்தால் என்ன, படைக்கவில்லை என்றால் என்ன என தோன்றிவிடும் என ஒரு முறை ஜெயமோகன் கூறியிருந்தார். இலக்கிய ஆக்கங்கள் தோன்றிய காலத்திலிருந்தே இலக்கிய பூசல்களும், சர்ச்சைகளும் அதன் காரணமாக சண்டைகளும் தோன்றிவிட்டன. இன்று நமக்கு படைப்புகள் மட்டுமே கண்களுக்கு தெரிகின்றன. அப்போது நடந்த சண்டைகளை தோண்டித்தான் எடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இப்போது நிலைத்திருக்கும் படைப்புகளுக்கு அப்போது நிகழ்ந்த சண்டைகள்தான் காரணம் எனவும் தோன்றுகிறது.

Wednesday, July 5, 2017

பிக் பாஸ்: அடைக்கப்படும் மனது



புரூஸ் லீ முழுமையாக நடித்த மூன்று முழுமையான படங்களில் ஒரு நல்ல படமாக பிக் பாஸ் என்கிற படத்தைச் சொல்லலாம். ஹீரோயிசம் இல்லாமல் சாதாரண மனிதராக தோன்றிய படம். அற்புதமான சண்டைகாட்சிகளும் உண்டு. நண்பர்களைத் தேடி ஐஸ்பேக்டரிக்கு வரும் லீ அங்கு நடக்கும் ஒருவரை ஒருவர் தாக்கும் தொடர் சண்டைகளைக் கண்டு ஒதுங்கி இருந்துவிட்டு ஒரு கட்டத்தில் பொருக்கமுடியாமல் இறங்கி எல்லோரையும் தாக்குவார். வெற்றியும் பெறுவார். ஆனால் கட்டுரை அதைப் பற்றியதல்ல. இப்போது விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் ஒரு வீட்டில் வாழுகின்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சிப் பற்றியது

இந்த நிகழ்ச்சி இந்தி, மலையாளம், கன்னடம், என்று முக்கிய மொழிகளில் உள்ள டிவி ஷோக்களாக நடந்திருக்கிறது. இந்தியில் பல பார்ட்டுகளாக நடந்திருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான நிகழ்ச்சி 100% உண்மையானது அல்ல. பல முன்பே பேசிவைத்து எடுக்கப்பட்டவைகள். எப்படி ஒரு டிவி நாடகத்தை மக்களின் டிஆர்பி ரேட்டை பொருத்து கதையை மாற்றிக் கொள்கிறார்களோ அதுபோல நடக்கும் நிகழ்ச்சியில் அவ்வப்போது சில ஏற்றங்களைக் கொண்டு மாற்றி அமைக்கிறார்கள்.

Monday, July 3, 2017

திண்ணையும் மாடியும்



எங்கள் ஊரில் இன்னும் ஓடுவேய்ந்த திறந்த திண்ணைகள் கொண்ட வீடுகள் இருக்கின்றன. சிறுநகரம் என்றாலும் இன்னும் பழமையை விட்டுவிடவில்லை. வேய்ந்தஓடும் திண்ணையும் கொண்ட வீடுகளை உடையவர்கள் வசதியற்றவர்கள் என்கிற முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. ஏனெனில் உடைந்த திண்ணைகளைப் பார்க்கும் போது அதுதான் மனதில் தோன்றச் செய்கிறது. சற்று வசதியடைந்தது, முதலில் திண்னையில்தான் மாற்றம் செய்வார்கள். திண்ணையை ஒருபக்கம் கொஞ்சம் உடைத்து சமதளத்தோடு சேர்த்து வண்டி வைக்க ஏற்பாடு செய்வார்கள். இன்னும் வசதிவந்துவிட்டால் முழு திண்ணையையும் உடைத்து சமதளமாக்கி வண்டி வைக்க அல்லது வேறு வீட்டின் பொருட்களை வைக்க பயன்படுத்திக் கொள்வார்கள். கூடவே முன்பக்கம் கிரில் கேட் அடித்துவிடுவார்கள். கூரைவரை போகும் கிரில் கேட்வைத்ததும், முன்பக்கம் உள்ள ஓடுகளை எடுத்துவிட்டு ஒட்டு அதாவது சிமெண்டாக மாற்றிவிடுவார்கள்.

Saturday, July 1, 2017

ஜிஎஸ்டி அவசியமா



என் உறவினர்களில் சேல்ஸ்டாக்ஸில் வேலைசெய்த ஒருவரையும், பேங்கில் வேலையில் இருந்த ஒருவரையும் சுற்றி மக்கள் எப்போதும் இருக்கும். அவர்களின் வீடுகளில் காலையில் சிலரும் மாலையில் சிலரும் என்று யாராவது வந்து சந்தேகங்களை கேட்டுச் கொண்டேயிருப்பார்கள். இந்த இரண்டுதான் முக்கியமாக இருக்கும்: எப்படி வரியை கட்டாமல் இருப்பது எப்படி லோனை எளிதாக வாங்குவது.
ஒரு அரசாங்கத்திற்கு வரி என்பது மிக முக்கியமானது. ஆங்கிலேயர்கள் கொழுத்த வரியால்தான் தன் நாட்டின் வளத்தை பெருக்கிக் கொண்டார்கள். அதேபோல மக்களுக்கு வரி குறைவாக இருப்பதும் மிக அவசியம். முன்பு காலங்களில் வரி குறைவாக வாங்கிய அரசனை புலவர்கள் போற்றி பாடியிருக்கிறார்கள்.

குழந்தையாய் இருத்தல்



கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். சில கோபப்படும் நபர்களை காணும்போது பரிதாபமாக, சங்கடமாக இருக்கும். அதிலும் சிலர் இயல்பாகவே கோபத்திற்கு பழக்கப்பட்டவர்கள் போல் தெரிவார்கள். வீட்டில், அலுவலகத்தில், வெளியே பொதுஇடத்தில் சின்ன ஏமாற்றங்கள்கூட மனிதர்களை வெறுபடைய வைத்து கோபம் கொள்ளவைக்கின்றன. சாதாரண உரையாடல்கள் முதல் சமூக அவலங்களை எதிர்கொள்ளும் வரை எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டியிருக்கிறது.

அதிகம் கோபம் வரும் நபர்களிடம் குழந்தை மனதோடு இருந்துவிட்டால் பிரச்சனைகளை எளிதாக தாண்டிவிடலாம், கோபத்தை விட்டுவிடலாம் என அறிவுறுத்துவதை பொதுவாக காணமுடியும். ஆன்மீகம், மருத்துவம் இலக்கியம் போன்ற துறைகள் மனிதன் அவன் மனதை ஒரு குழந்தையின் மனதுபோல வைத்துக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறது. கோபத்தை கட்டுப்படுத்த அதுதான் சிறந்த வழி என்கிறது. கோபப்பட்டு வெறுப்பில் நிற்கும் சமயங்களில் நானும் நினைப்பதுண்டு ஏன் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று.